Sunday 23 October 2022

மீனாட்சி சுந்தரப் புலவர் 'அருளிய' ஸ்நோலின் வெண்பா மாலை


நீர்காக்க மண்காக்க நீபோன ஊர்வலத்தில்
ஊர்காக்க விட்டாய் உயிர்
தூரத்தில் நீநடந்தும் துப்பாக்கிப் பற்களுனைக்
கீறிக் கிழித்தகதை கேள்
'வேதாந்தா' விட்டெறிந்த வெள்ளிப் பணம்பொறுக்கச்
சாதா ரணமாமுன் சாவு !
ஆட்சிப் பணிக்கூலி ஆற்றுகின்ற சேவைக்குச்
சாட்சியமோ உன்றன் சவம்?
நித்திலப் பேரலையின் நீலக் கடலிற்குச்
செத்தேநீ தந்தாய் சிவப்பு
காவி சதிபின்ன, காக்கி குறிவைக்க
சாவில் பிளந்ததுவோ சங்கு ?
பின்மண்டை உட்சென்று முன்மண்டை பேர்த்தெடுக்கும்
குண்டுகளால் செய்தான் கொலை
இடைப்பாடி மைந்தனுடன் இந்தியாவை விற்றோன்
துடைத்தெறிந்த தூத்துக் குடி
'அரசார் கொலைகள் அறம்சார் கலைகள்'
துறைசார் கருத்தே துணை!
ஆணைய ஆய்வுனக்கே அள்ளிக் கொடுத்தாலும்
போனவுயிர் மீளுமோ போ !

No comments:

Post a Comment