Friday 1 March 2013

நேற்றில்லாத ஓர் இடைவெளி

நேற்றில்லாத ஓர் இடைவெளி 

ஒரு பறவை உதிர்த்துச் சென்ற
நீண்ட இறகு ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்தேன்

அப்பறவையின்  வாழ்வை புரியும் முயற்சியில்
சிறகை முகர்ந்து பார்க்கும்பொழுது
என் நுரையீரல் நிறைகிறது
பரந்த ஆகாயத்தின் நீலநிற வாசனையால்

ஒற்றையாய் திரிந்த ஒரு மேகதுண்டை
தொட்டுப்பார்த்தது போலாகிறது
அவ்விறகை என் விரல்கள் தீண்டும்போதெல்லாம்

என் குழந்தையின் கன்னத்தை அவ்விறகால் தொடும்பொழுது
கூச்சத்தில் குழுங்கிச் சிரிக்கிறது மழலை.

ஏதோ ஒரு மர உச்சியில் அமைந்த  சிறுகூட்டுக்குள்
தாயின் சிறகடியில் வெம்மை தேடும் அதன் குஞ்சுகள்
உணர்கின்றன நேற்றில்லாத ஓர் இடைவெளியை

- பா . மீனாட்சி சுந்தரம்